Friday, August 28, 2015


31-08-2015 அன்று பணி ஓய்வு பெறும் 
தோழர். M.லட்சம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நமது மதிப்பிற்குரிய மாநிலத்தலைவர்  தோழர் M. லட்சம் அவர்கள்  வரும் 31-08-2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரைப் பற்றிய சிறு குறிப்பு....

மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது அவரது மூத்த சகோதரரின் முயற்சியால் சென்னை ITC கம்பெனியில் எழுத்தர் பணி கிடைத்ததும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணியில் சேர்ந்தார்.

சுமார் 3 ஆண்டுகளுக்குப்பின் 1983 ஜனவரி18-ல் தபால் தந்தி துறையில் அன்றைய தமிழ்நாடு வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொலைபேசி நிலையத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
பணியில் சேர்ந்த நாளிலிருந்து தொழிற்சங்க பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். கிளைச் செயலராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர். தோழர். காமராஜ் மீதான தாக்குதல், தோழர்கள் NK,SSK மீதான காவல்துறையில் பொய் புகார், காஞ்சி கோட்டச் செயலர் சங்கரன் மீதான காவல்துறை பிரச்னைகளை வென்றெடுக்க முன்நின்றவர்.

அதன்பின்பு மதுரை தொலைதொடர்பு மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள கம்பத்திற்கு மாற்றலாகி பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்டத்தில் கம்பம் கிளைச் செயலர், தொடர்ந்து மாவட்டச் சங்க நிர்வாகி, LJCM உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர். 2005ல் கோவையில் நடந்த தமிழ் மாநில மாநாட்டில் மாநிலச் சங்கத்தில் அமைப்புச் செயலராக பொறுப்பேற்று இன்று NFTE  என்ற மாபெரும் இயக்கத்தின் மாநிலத் தலைவராக மாண்போடு செயலாற்றி வருகிறார். அவரது செயல்பாட்டில் என்றைக்குமே ஊனம் தடையாக இருந்ததில்லை.

இலாகாவில் டெலிபோன் ஆபரேட்டர், DE அலுவலக எழுத்தர், இன்றுவரை டெலிபோன் பில் கவுண்டர் கிளார்க் என எந்தப் பணியென்றாலும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

தொழிற்சங்கத்தில் மட்டுமல்ல அவரது  சொந்த ஊரான கே.கே.பட்டியில் நகர் நலக்கமிட்டியின் செயலாளராகவும் சமுதாயக் கமிட்டியின் செயலாளராகவும் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பல்வேறு பிரச்னைகளுக்கு சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டு நியாயமான, சுமூகமான தீர்வை சொல்பவர் என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. திராவிட கொள்கைகளில் அழுத்தமான பார்வை கொண்டவர்.

தி.மு.கவின் தீவிரமான  தொண்டர் என்றபோதிலும் மற்ற கட்சியினரிடமும் கனிவாக பழகக் கூடியவர். தனது கட்சி சார்பாக தனி தொழிற்சங்கம் துவக்கப்பட்டபோதிலும் தனது இறுதிநாள்வரை NFTE இயக்கத்தில் தான் பணியாற்றுவேன் என தனது கட்சித் தலைவர்களிடம் ஆணித்தரமாக கூறியவர். அத்தகைய மனிதநேயமிக்க மாநிலத் தலைவர் தோழர். லட்சம் வரும் 31.08.2015 அன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவரது தொழிற்சங்க செயல்பாட்டிற்கும் பொதுச் சேவைக்கும் உறுதுணையாக நின்றவர்கள் அவரது மனைவியும் 2குழந்தைகளும். மூத்த பெண் சூர்யாவிற்கு திருமணம் முடிந்து விட்டது. அவரது கணவர் சந்திரசேகர் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது இளைய மகன் ரவிவர்மா டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு உரக்கடை நடத்தி வருகிறார்.

அவரது தொழிற்சங்க பணியும் பொதுச் சேவையும் தொடர வாழ்த்துக்கள்.....



No comments:

Post a Comment